MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: இண்டர் லாக் பிரிக்குகள் பற்றி நிறைய கட்டுரைகள் படிக்கிறேன். ஆனால் எதுவுமே எனக்கு முழுமையாக இல்லை. என் கேள்விகள் அ. இண்டர் லாக் பிரிக்குகள் கொண்டு பாரம் தாங்கும் தாய்ச் சுவர் அமைக்க முடியுமா? ஆ. இண்டர் லாக் பிரிக்குகள் எக்ஸ்டிரியர் அல்லது இண்டீரியர் பார்ட்ஷியன், காம்பவுண்ட் இதில் எதற்கு ஏற்றது? இ. இண்டர் லாக் பிரிக்குகள் கொண்டு சுவர் அமைப்பதற்கு வழக்கமான வேலையாட்களே போதுமா? - பொறி. பிரகாஷ், சேலம்.


Answer:

இண்டர் லாக் பிரிக் கொண்டு பாரம் தாங்கும் தாய்ச் சுவர்களையும், வீட்டினுள் பிரிப்புச் சுவர்களையும் வீட்டு வெளியில் சுற்றுச் சுவர்கள் அமைப்பதற்கும் Interlock brick ஏற்றவை. இந்த Interlock brick கொண்டு வீடுகள் கட்டுவதற்கு வழக்கமான வேலையாட்களை விடக் குறைவான வேலை ஆட்களே போதுமானது. இதன் பாரம் தாங்கும் வலிமை குறைவாக இருப்பதால் Interlock brick கொண்டு G+1 கட்டடம் மட்டும் கட்டமுடியும். அதற்கு மேலுள்ள கட்டடங்களைக் கட்டமுடியாது. கட்டுமானத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் (Precast Concrete Solid Block, Porotherm Bricks முதலியவை) எளிதாகவும், குறைந்த விலையில் கிடைக்கும் போது Interlock brick களின் தேவை ஏற்படவில்லை. மேலும், Interlock brick கட்டுமானம் பற்றி அறிய எங்களின் கட்டுமானப் பொறியாளர் செப்டம்பர் 2020 இதழைப் படியுங்கள்.



Q: “அதிக டிஎம்டி கம்பிகள்’ வலிமையை தருமா? வீரப்பன் சார். டிஎம்டி கம்பிகள் பயன்படுத்தும் போது ஒரு பொறியாளாராகிய நான் சொல்வதை எனது கான்ட்ராக்டர் முதலாளி கேட்பதில்லை. அதிக எண்ணிக்கையாலான கம்பிகள்., அதிக விட்டமுள்ள கம்பிகளை பயன் படுத்தச் சொல்கிறார். அது தான் அதிக தரமானது, உறுதியானது, நீடித்து உழைக்கும் என்று கூறுகிறார். வீட்டு உரிமையாளர்களும் அப்படித்தான் கேட்கிறார்கள். நான் எப்படி செயல்படுவது? - பொறி.கு.கணேஷ்., ஆவடி


Answer:

 பொறிஞர் கணேஷ்; அவர்களே, உங்களுடைய அனுபவம் பல பொறியாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கும் அது தொடர்கிறது. உங்களுடைய ஒப்பந்தகாரர் முதலாளி ஒரு தகுதி பெற்ற பொறியாளர் அல்ல. அவருக்கு உறுதிபெறு காங்கீரிட்டில் மிகச்சரியாக எவ்வளவு கம்பிகள் போட வேண்டும் என்று தெரியாது. கட்டட மேஸ்திரியும் கம்பி வளைப்போரும்  பல ஆண்டுகளாக என்ன செய்து வந்தார்களோ அதையே உங்களுடைய முதலாளியும் சொல்லுகிறார். டிஎம்டி கம்பிகள் Fe 415 / Fe 500 ; இவை பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட மெல்லெஃகுக் கம்பிகளை (Mild Steel Rebars) விட கூடுதலாக 1.85 / 2 மடங்கு அதிகமான பாரத்தைத் தாங்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாத காரணத்தால் அதிக விட்டமுடைய மிகுதியான கம்பிகளைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள் இது தவறு. அதிக விட்டமுடைய மிகுதியான கம்பிகளைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் கிடையாது. மாறாக, பாரம் மிகுதியாகும் போது முதன் முதலில் கான்கிரீட் நொறுங்கி பாதிப்புகள் ஏற்படும். 

 

எனவே, தேவைக்கு 5 சதவீதம் குறைவான கம்பிகளைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. தண்டச் செலவும் குறையும். பொறியாளராகிய நீங்கள் Under Reinforcemed Concrete & Over Reinforced Concrete உறுப்புகளில் பாரம் மேல் வரும் போது ஏற்படும் விளைவுகளை அவர்கட்கு விளக்கமாக சரியாக சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இதுதான் ஒரே வழி.



Q: சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர், கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள புறநகர் பேருந்து நிலைய வடிவமைப்பு தோற்றத்தினப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு பொறியாளராக என் கண்ணில் ஏகப்பட்ட குறைபாடுகள் தெரிகின்றன. -பொறி.இம்ரான், மணலி.


Answer:

சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் - கேளம்பாக்கத்தில் அமைய உள்ள புறநகர்ப் பேருந்து நிலைய வடிவமைப்புத் தோற்றத்தை வாட்ஸ் அப்பில் தான் பார்த்தேன். தெளிவான விவரமான வடிவமைப்பு வரைபடங்கள் பார்த்தால்தான் கருத்து சொல்ல முடியும்.
 
ஒரு நல்ல புறநகர் பேருந்து நிலையம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூரில் அமைத்துள்ள பழைய TPTC (Thanthai Periyar Transport Corporation) கட்டியுள்ள பேருந்து நிலையத்தைப் பாருங்கள். அதன் வடிவமைப்பு 1995 - ல் நான் அக்கட்டுமானத்தை  வடிவமைத்தேன். அதேப்போல கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையமும் ஊர்திப் போக்குவரத்துக்குச் சிறப்பாகவே அமைந்துள்ளது என்பது என் கருத்து.



Q: கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்க இருக்கிறோம். ஆவணங்கள் எல்லாம் சரிபார்த்தாகி விட்டது. ஆனால் கட்டுமானத்தின் தரம், அந்த குடியிருப்பின் கட்ட வடிவமப்பின் தரம் ஆகியவற்றை எங்ஙனம் தெரிந்து கொள்வது? - எஸ்.பவித்ரா, ஃபேசன் டிசைனர்


Answer:

அன்புள்ள சகோதரி பவித்ரா அவர்களே, நீங்களே புதிய வீட்டை வாங்குவதற்கு முன்பாக கட்டுமானத்தின் தரம், அதன் வடிவமைப்பின் தரம் இவற்றை அறிய 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்டடத் துறையில் திறமையும் அனுபவமும் உள்ள கட்டுமானப் பொறியாளரை அணுகுங்கள்.



Q: அய்யா வணக்கம், திருவள்ளூரில் மேல் நல்லாட்டூரில் ஜி+2 வீடு கட்ட இருக்கிறேன். 11 மீ உயரம் வரக்கூடும். கட்டடம் கட்டும்போதே இங்கே செல் டவர் அமைக்க என்னை அணுகி இருக்கிறார்கள் . செல் டவர்கள் தரக்கூடிய அதிர்வு, எடை காரணமாக இப்பகுதியில் யாரும் டவர்களை அமைக்கவிடவில்லை. ஒருவேளை செல்டவர் அமைப்பதற்கான கட்டட வடிவமைப்பு, அடித்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொண்டால் செல்டவர் பொருத்த விடலாம் அல்லவா? மாதம் 30 ஆயிரம் வாடகை வரக் கூடிய சூழல் இருப்பதால் கேட்கிறேன். ரமேஷ் சந்தர், விற்பனை மேலாளர், திருவள்ளூர்.


Answer:

உங்களுடைய  புதிய வீட்டுக் கட்டடத்தின் மீது (11.00 மீட்டர்க்கு மேலே செல் டவர் அமைக்க ஒப்புதல் தராதீர்கள். செல் டவரால் ஏற்படும் அதிர்வுகளினாலும் புயல் காலங்களில் பலமாக காற்று வீசுவதானாலும் செல் டவர் பொருத்தியக் கட்டடங்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மாதம் ரூ. 30,000க்கு ஆசைப்பட்டு ரூ. 50 இலட்சம் செலவழித்துக் கட்டிய வீடு சேதமடைவதற்கு நீங்களே காரணமாக இருக்காதீர்கள். வீடுகளின் மொட்டை மாடியில் இப்படிப்பட்ட செல் டவர்களை அமைப்பது பாதுகாப்புடையதன்று.

 


பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்


-----------------------------------------------------------------------------------


2020, நவம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற : Call: 8825577291



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000