MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: சார். நான் பொறியியல் படிப்பை 2018 இல் முடித்தேன். எனது தந்தை என்னை தனியாக ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்கி நடத்த சொல்கிறார். நிதி உதவி செய்யத் தயாராக இருக்கிறார். ஆனால் எனக்கு தயக்கமாக இருக்கிறது. பொதுவாக, ஒரு கட்டுமான நிறுவனத்தை தொடங்க வேண்டுமெனில்., சிவில் படிப்பை முடித்த பிறகு எத்தனை ஆண்டுகாலம் அனுபவம் இருப்பது சிறப்பானது?. - எஸ். லிஷாந்த் ராஜ், கவரப்பேட்டை


Answer:

தங்களுடைய தந்தை சொல்வது ஆக்கபூர்வமான நல்ல கருத்துரை தான்.
 
ஆனால், பொறியியல் பட்டம் பெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் - ஒரு பெரிய தனியார் கட்டுமான வேலைகளில் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவது பணியாற்றிப் பலவகை அனுபவங்களைப் பெறவேண்டும். இந்த அனுபவ அறிவு, திறமை இல்லாமல் தனியாக கட்டுமானம் நிறுவனம் தொடங்கி நடத்துவது- வெற்றிகரமாகச் செயற்படுத்துவது எளிதல்ல: கடினமானது.
 
எனவே, இன்னும் ஒரு 3 அல்லது 4 ஆண்டுகள் பெரிய கட்டுமான நிறுவனத்தில் - குறிப்பாக வேலை மேலாளராக (Site Supervisor) வேலைபார்த்து அதன் பின் தனியாக ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்கி நடத்துவது நல்லது. தங்கட்கு என்அன்பார்ந்த வாழ்த்துகள் !.



Q: நீங்கள் பொதுப்பணித்துறையில் பணி ஆற்றியவர். நேர்மையானவர். அந்த வகையில் இந்த கேள்வி.. சென்னையில் மதுரவாயல் டூ துறைமுகம் பறக்கும் சாலை அமைக்கப்பட்ட போது, பாலத்தின் தூண்கள் கூவம் ஆற்றில் அமைவதால் சென்னை பெருவெள்ளம் வடிகால் பாதிக்கப்படுவதாக அத்திட்டம் நிறுத்தப்பட்டது. அப்படி பாதிக்கப்ப்டகூடிய சூழல் உண்மையா? அது உண்மையெனில் அப்படி ஒரு கட்டுமான திட்டத்தை வடிவமைத்த பொறியாளர்கள் யார்? மேலும். ஏற்கெனவே போடப்பட்ட தூண்களை கூவம் ஆற்றிலிருந்து ஏண் இன்னும் அகற்றவில்லை.? ஒருவேளை அது பொய்யெனில் அப்படி ஒரு பொய்யை சொல்லி நல்ல திட்டத்தை பாதியில் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? மக்களின் வரிப்பணம் இப்படி பாழ்படுவதற்வதகு யார் காரணம்? - ஆர்.சாகுல் ஹமீது, மதுரவாயல்


Answer:

சென்னையில் துறைமுகம் - மதுரவாயில் பறக்கும் சாலைத் திட்டம் நிறுத்தப்பட்டதற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களே காரணம். 

 

திட்டம் தயாரிக்கும் போதே கூவம் ஆற்றில் வரும் வெள்ள அளவைக் கணக்கெடுத்தே - கூவம் ஆற்றினுள் பெரிய காங்கிரீட் தூண்கள் அமைப்பதால் - ஏற்படும் தடையினை ஆராய்ந்த பின்னரே திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன. 

 

பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் - அன்றைய முதல்வர் ஏதோ வெளிப்படையாக தெரிவிக்க முடியாத காராணத்தால் - அனுமதி திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பின்னரும் 2015இல் சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது கூவம் ஆற்றின் ஓட்டம் தடைப்படவில்லை என்பதே உண்மை. இத்தகைய சூழலில் - கற்றறிந்த பொறியியல் வல்லுநர்கள் சமுதாய நலனில் அக்கறை கொண்டு 
-முதல்வர் கருத்துரையை எதிர்த்துக் குரல் எழுப்பி இருக்கவேண்டும் (தலைமைச் செயலகக் கட்டடங்கள் வலு விழந்துவிட்டன, எனவே, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கூறிய போது என்னைப் போன்றோர் தலைமைச் செயலகக் கட்டடங்கள் பொறியியல் கட்டுமான உறுதியுடன் இருப்பதைச் சுட்டிக் காட்டி அறிக்கைகள் விட்டோம். எனவே, திட்டம் கைவிடப்பட்டது). 

 

தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் - குறிப்பாகத் தலைமைப் பொறியாளர்கள் தம் திறமையில் நம்பிக்கையோடு சரியான உறுதியான கருத்துரைகளைத் தெரிவிக்க அச்சப்படுகின்றனர். இதுவே, இன்றைய பெரிய குறை. இதனால், நாடும் மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. "அச்சமென்பது கீழ் மக்களது ஆசாரம்” என்பது ஓங்கி ஒலிக்கவேண்டும்.



Q: சார் ஏஏசி கற்களை பயன்படுத்தாதீர்கள் என சொல்லும் நீங்கள் அதன் அமுக்க தகவு குறைவு எனக் கூறுகிறீர்கள். மேற்பூச்சு செய்தால் நிற்காது என்கிறீர்கள். விலை அதிகமான ஏஏசி கற்கள் சிறந்த கட்டுமானக் கற்கள் இல்லை எனவும் தொடர்ந்து வலிய பிரச்சாரம் செய்கிறீர்கள். A) ஏஏசி கற்களுக்கு தாங்குதிறன் குறைவு என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், சுவர் தாங்கு கட்டுமானங்கள் வகைக்கு தான் தாங்கு திறன் பற்றி கவலைப்பட வேண்டும்.. பிரெம்ட் ஸ்ட்ரக்சர் கட்டுமானங்க்களுக்கு அந்த தேவை இல்லையே? B). மேற்பூச்சு என்று பார்த்தால் கலவையில் ஒரு சில ஆட்மிக்சர்களை சேர்த்தால் மேற்பூச்சு உறுதியாக நிற்கும் என்பது பலரும் அறிந்த ஒன்று. அது தவிர ஜிப்சம் மேற்பூச்சுக்கு ஏஏசி சுவர் மிகவும் ஏற்றது. அது தவிர, வால் டைல்கள்..,வால் மார்பிள் கற்கள் பொருத்தும் போது வழக்கமான கலவை மேற்பூச்சு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை C)விலை அதிகமானது என ஏஏசி கல்லை குறை கூறும் நீங்கள் போரோதெர்ம் கற்களை மட்டும் சிபாரிசு செய்கிறிர்கள்.. களிமண்ணை எடுத்து சுற்று சூழலை கெடுக்கும் விலை அதிகமான போரோதெர்ம் கற்களை விட ஏஏசி கற்கள் மிகவும் சிறந்தது. மேலும் இது கட்டட எடையைக் குறைக்கிறது.. ஏஏசி கற்கள் ஒலி தடுப்பு, தீத்தடுப்பு குணநலன் மிக்கவை. இது ஏஏசி கற்கள் பற்றிய என் பார்வை அவ்வளவு தான்.. - பொறி.ஆர். ஜி. குமார்.. கோவை


Answer:

அன்புள்ள பொறிஞர் குமார் அவர்களே. AAC கட்டுக் கற்களைக் கட்டுமானத்தில் பயன்படுத்துவதால் 
ஏற்படும் குறைபாடுகளை பல நிகழ்வுகளில் பட்டியலிட்டுள்ளேன். (விளக்கம் வேண்டுவோர் நாங்கள் வெளியிடும் கட்டுமானப் பொறியாளர் - ஆகஸ்ட் 2020 இதழ் பக்கங்கள் 17 முதல் 20 வரை அன்பு கூர்ந்து படித்திடுக.) 

 

ஒரு சிறந்த செலவு குறைந்த சிக்கனமான கட்டுமானப் பொருளாக இல்லாமையால் AAC கட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள் என்று கருத்துரைக்கிறேன். 20 ஆண்டுகளாக - பெரும்பாலான பெரிய கட்டுநர்களால் பன்மாடிக் கட்டடங்களில் எடைகுறைந்த AAC கட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சரியான மிகச் சிறந்த கட்டுமானப் பொருளன்று என்று மாறுபட்ட கருத்தை நான் எடுத்துரைக்கும்போது உங்களைப் போன்றவர்கள் உணர்ச்சி வயப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறேன். இக்கற்களின் கட்டுமானச் செலவு - எரிசாம்பல் கற்கள் மற்றும் முன்வார்த்த காங்கிரீட் கட்டுகளைவிட (24% மற்றும் 27% சதவீதம் கூடுதல் விலை).

 

AAC கட்டுகளைவிடச் சிறந்த கட்டுமானப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் போது - தேவையின்றி எதற்காக விலை மிகுந்த, குறைபாடுகளை உடைய AAC கட்டுகளைத் தெரிந்தெடுக்க வேண்டும்? AAC கட்டுகளின் எடை குறைவால் அடித்தளம், தூண்கள், விட்டங்களில் 3 % முதல் 5% வரையே சேமிப்பு கிடைக்கிறது. 

 

- போரோ தெர்ம் கற்களைப் பயன்படுத்துமாறு நான் பரிந்துரைக்கவில்லை. ஒப்பீட்டு விலைக்காகவே எடுத்துச் சொல்லப்பட்டது.



Q: சார் ! நான் ஒரு மாணவன். பொதுவாக கான்கிரீட் தளம் அமைக்கும் போது., ஆங்காங்கே மின்தேவைக்காக பிவிசி குழாய்கள் பதிக்கிறோம். இதனால் கான்கிரீட் தளத்தின் தடிமன் பாதிக்கப்படாதா? ஆறு அங்குல தளத்தில் கான்கிரீட் ஒரு அங்குலம் பைப் இடையில் வந்தால்., கான்கிரீட் அடர்த்தி பாதிக்குமே? - ஆர். வினோத் சம்பத், சிவகாசி


Answer:

காங்கிரீட் கூரைப்பலகத்தினுள் மின்சார பிவிசி குழாய்களை எடுத்துச் செல்வதால் காங்கிரீட்டின் அடர்த்தி ஒரு சிறிது (குழாய்கள் செல்லுமிடத்தில் மட்டும்) பாதிக்கப்படவே செய்கிறது. அப்படி பிவிசி குழாய்களைச் சுற்றியுள்ள காங்கிரீட்டோடு பிணைப்புத் தன்மையும் குறைவதால் பிணைப்பு விரிசல்களும் (Bond Cracks) ஏற்படவே செய்கின்றன. ஆனால், இந்தப் பாதிப்பு குறிப்பிடத்தக்க பெரிய அளவுக்குக் காங்கிரீட்டின் தாங்குதிறனைக் குறைப்பதில்லை. எனவே, அச்சமின்றி காங்கிரீட் கூரைப்பலகத்தினுள் மின்சார பிவிசி குழாய்களைப் பதித்து எடுத்துச் செல்லலாம்.



Q: எந்த டிஎம்டி பார்களை எதற்கு பயன்படுத்தவேண்டும்? சார் ! நாங்கள் ஜி + 2 கட்டுமானம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறோம். சந்தையில் சிடிடி ரீ-பார்கள், டிஎம்டி பார்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.நாங்கள் எதைப் பயன்படுத்த வேண்டும்? ஏன்? - ஸ்டானிஸ்லைஸ் டேனியல் , அம்பத்தூர்.


Answer:

சந்தையில் கிடைக்கும் குளிர் முறுக்குக் கம்பிகள் (Cold Twisted Deformed bars - CTD) காங்கிரீட் உறுப்புகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். ஏனென்றால், CTD கம்பிகளைப் பயன்படுத்திய காங்கிரீட் உறுப்புகளில் - (பலகம், விட்டம் மற்றும் தூண்கள்) விரைவில் (5 ஆண்டுகளுக்குள்ளே) துருப்பிடித்து இவ்வுறுப்புகளை வலுவிழக்கச் செய்கின்றன. குளிர் முறுக்கலின் போது வெளிப்புற புடைப்புகளில் (outer surface ribs) நுண்ணிய விரிசல்கள் ஏற்பட்டு காற்றிலுள்ள மற்றும் தண்ணீரிலுள்ள உயிர் வளியை (Oxygen) உறிஞ்சி துரு பிடிப்பு நிகழ்கிறது. எனவே தான், CTD உறுதியூட்டிக் கம்பிகளைப் பயன்படுத்தக்கூடாது. 


மாறாக TMT (Thermo Mechanically Treated) உறுதியூட்டிகளின் மேற்பரப்பில் (due to Quenching process) நுண்ணிய விரிசல்களும் -அதன் காராணமாகத் துருப்பிடித்தலும் நடப்பதில்லை. எனவே TMT கம்பிகளைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. 



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000