Q: தமிழ் நாட்டில் பொறியியல் தரம் இப்படி குறைந்து போனதற்கு காரனம் தமிழ் வழி கற்றல் தான் என்கிறார் என் பேராசிரியர்.. இதற்கு எளிய தமிழில் கட்டுமானக் கட்டுரைகள் எழுதும் உங்கள் மறுப்பு என்ன? தமிழ் வழி கற்றல் காரணமிலையெனில், பொறியியல் தரம் இப்படி குறைந்து போனதற்கு வேறு என்ன தான் காரணம்?. வட இந்திய மாநிலங்க்களிலும்., அண்டை மாநிலங்களிலும் பொறியியல் தரம் சூப்பராக இருப்பதற்கு அவர்கள் ஆங்கிலம் வழி கற்பது தானோ? - பிரதீப்,பீ. ,சிவில் நான்காம் ஆண்டு
முற்றிலும் தவறான அரைவேக்காட்டுத்தனமான முடிவு உங்களின் பேராசிரியருடையது. தமிழ்வழிக் கற்றவர்கள் பலரும் பெரும் பொறுப்புக்களிலும் உயர் பதவியிலும் உள்ளனர். தமிழ்வழிக் கற்றல் நல்ல புரிதலையே ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தரம் குறைந்து போனதற்கு முக்கியமான காரணங்கள்:
1. கல்வியே வியாபார ரீதியில் அணுகப்பட்டு அளிக்கப்படல்.
2. திறமையும் அனுபவமும் இல்லாத பேராசிரியர்கள்
3. கல்லூரியில் ஆய்வகம், நூலகம் மற்றும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமை.
4. பொறியியல் கல்வி - வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் தெரியாமல் புற்றீசல் போல நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளைத் திறந்தமை. எனவே, இன்றுள்ள 565 பொறியியல் கல்லூரிகளில் உதவாக்கரை 500 பொறியியல் கல்லூரிகளை உடனே மூடி - அவற்றை ITI தொழிற்கல்விப் பயிலகங்களாக மாற்றிட வேண்டும் என ஈராண்டுகளாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
Q: தனி வீட்டு கட்டுமானத்திற்கு கான்கிரீட் தயாரிக்க ஏற்ற ஜல்லிகளை எவ்வாறு கண்டுகொள்வது? சப்ளையர்கள் தரமற்ற ஜல்லிகளை நம் தலையில் கட்டி விடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்....... - கு. ஆடல் நாயகன்., வழக்கறிஞர்.
கருங்கல் சல்லிகளுக்கென தனியான தரக் குறிப்புகள் உள்ளன. தட்டையாகவோ நீட்டாகவோ இல்லாமல் சிறிது ஒழுங்கற்ற குண்டு வடிவத்திலும் 5 கிலோ சுத்தியால் அடித்தால் உடையாதவையாகவும் இருக்க வேண்டும்.
கட்டுமானப் பொறியாளர் அல்லது கட்டுமான மேற்பார்வையாளரிடம் கேட்டால் - தரமான கருங்கல் சல்லிகளைத் தெரிந்தெடுப்பர். கருங்கல் சல்லிகளின் தரக் குறிப்பறிய - ஏதாவது ஒரு Building Construction பாட நூலைப் படித்திடுக.
Q: சார் வனக்கம்... இது என் சொந்த கருத்து.. வட சென்னையில் பெரம்பூரில் திமுக ஆட்சியில் ஒரு பாலம் கட்டப்பட்டது..பின் அது அதிமுக ஆட்சியில் மண் பரிசோதனை தோல்வி எனக் கூறப்பட்டு நிறுத்தப்பட்டது...அதன் பின் மறுபடி திமுக அதில் சில மாற்றங்களை செய்து அப்பாலத்தை கட்டி முடித்தார்கள். அதில் அரசியல் கலந்திருந்தாலும்., வட சென்னை என்பது பொதுவாகவே மண் வளத்தில்., மண் இறுக்கத்தில் சற்று வீக்கான பகுதி என்பதையும்., அடித்தளத்தில் பாறைகள் அதிகம் இல்லை என்பதையும் அங்கு மண்ணின் தாங்குதிறன் குறைவு என்பதையும் நாம் மறுக்க முடியாது. என் கேள்வி என்னவென்றால்., மண்ணின் தாங்க்கு திறனில் தென் சென்னை போல அல்லாமல்., சற்று வீக்காக இருக்கும் வட சென்னையில் எப்படி 45 மாடிகள் கொண்ட ஒரு பன்னடுக்கு கட்டடத்தை கட்டுகிறார்கள்? (பார்க்க ஜூன் மாத பில்டர்ஸ்லைன்) (பெரம்பூர் பாலத்திலிருந்து 1 கி,.மீ தொலைவில் தான் இககட்டடம் கட்டப்பட இருக்கிறது) உங்கள் நேரடி பதில் தேவை.. - சௌம்யா ராமனாதன்., இண்டிரியர் டிசைனர்., புரசை
வட சென்னை பெரம்பூர் பாலக் கட்டுமானத்தில் தவறான மண் பரிசோதனை அறிக்கை பொருத்தமான அடித்தளம் அமைக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டது.
வட சென்னை - தென் சென்னை அடிமனை மண்ணமைப்பில் (அடையாறு, கூவம், கடற்கரையோரப் பகுதிகள் தவிர) - இரண்டும் ஒன்றே தான். பல இடங்களில் 18 மீட்டர் முதல் 24 மீட்டர் அடியாழத்தில் கெட்டித்தரை (hard Strata) கிடைக்கிறது. இதில் Deep Foundation எனப்படும் Group of Piles with pile cap at 20மீ மிலி 25மீ ஆழம் வரை போட்டு அதன் மீது 45 மாடிகள் கொண்ட பன்னடுக்குக் கட்டடத்தை எளிதாகக் கட்டலாம் பாதுகாப்போடு.
பெரம்பூர் பாலத்தில் Shallow Foundation எனும் 3மீ - 5மீ ஆழத்தில் Gravity Type Foundation போட்டதால் சிக்கல். இரண்டும் இரண்டு வகையான அடித்தளக் கட்டமைப்பை கொண்டவை.
எனவே வடசென்னையிலும் பன்மாடிக் கட்டடங்களை அச்சமில்லாமல் கட்ட முடியும்.
Q: ஆற்றுமணலுக்கு இது வரை பிராண்ட் பெயர் இல்லாத போது.., இப்போது எம்.சாண்டுக்கு பிராண்டிங் வர ஆரம்பித்திருப்பது நல்லதா? தவிர்க்க கூடியதா? நீங்கள் இதை வரவேற்கிறீர்களா? உங்கள் கருத்தென்ன? - சங்கையன்.,நெல்லை
எம் சேண்ட் எனப்படும் செயற்கை மணலுக்கு பிராண்ட் பெயரோடு நிறைய பேர் சந்தைப்படுத்த வந்துள்ளதை முழுமனதோடு வரவேற்கிறேன்.
அப்பொழுதுதான் செயற்கை மணலின் தரத்தை உயர்த்த முடியும். உறுதிப்படுத்தவும் தேவையானது. விலையும் குறையும் வாய்ப்புண்டு.
Q: அய்யா.. எங்களுக்கு சொந்தமாக ஒரு கிரவுண்ட் கட்டுமானம் ( ஷெட்) ஒன்று உள்ளது. 30 அடி உயரத்தில் சீலிங்க்(கான் கிரீட் சமதள கூரை) கட்டமைக்கப்பட்டிருக்கிறது. , இப்போது தரையிலிருந்து 20 அடிக்கு மேலாக., சீலிங்கை தொட்டபடி 15 க்கு 10 என்ற நீள அகல கணக்கில் பில்லர்கள் இல்லாமல் ஒரு கண்காணிப்பு அறை ஒன்றைக் 10 அடி உயரம் உடையதாகக் கட்ட உள்ளோம்.. பக்கவாட்டு சுவர்கள் மற்றும் கூரை சப்போர்ட்டில் இந்த சிறிய அறையை அமைக்க உள்ளோம்.( தரை டூ அறை ஸ்ரீ 20 அடி கிளியரண்ஸ்) ஆனால்., கிட்டத்தட்ட இதே அளவுகளில் ஒரு அறை அமைக்க வாசகர் ஒருவர் (பொறி. இனியன்) சென்ற மாதம் தங்களிடம் ஆலோசனை கேட்க., தாங்களோ அது போன்ற கட்டுமானங்க்களை கட்ட வேண்டாம் என பயமுறித்தி இருந்தீர்கள். கீழே வாகனங்கள் வந்து போக இடைஞ்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பில்லர்கள் வைக்க முடியாது.. எனவே, காண்டிலிவர் டைப் கட்டுமானங்கள் தானே அப்பிரச்சனையை தீர்க்கும்? உங்களுக்கு ஏண் காண்டிலிவர் கட்டுமானங்கள் மீது நம்பிக்கை இல்லை..? - ஜி.ஜி.பிளாஸ்டிக்க்ஸ்., பூங்குன்றன், அரியலூர்.
திரு. பூங்குன்றனும் தவறாகப் புரிந்து கொண்டு அல்லது முழுமையான புரிதலன்றிஎழுதியுள்ளார். நான் கொடுங்கை வடிவ (Cantilever) கட்டுமானங்களை மிகவும் விரும்பி வடிவமைப்பவன்.
100 அடி முதல் 200 அடி வரை இடையில் தூண்களின்றி தொழிலகங்களை வடிவமைத்துக் கட்டியவன். இருபக்க 50 அடி இடைவெளி கொண்ட கொடுங்கை வடிவ மாமண் நீர் பேருந்து நிலையத்தை வடிவமைத்துக் கட்டியவனும் நானே.
சென்னை அம்பத்தூரில் India Land Towers Building Main Entrance -12m Long Cantilever ஆக குறைந்த செலவிலும் வடிவமைத்துள்ளேன்.40 ஆண்டுகளுக்கு முன்பே சிதம்பரம் மின் நகரில் ஒற்றைத் தூணில் 6 கொடுங்கை விட்டங்களோடு (ஒவ்வொன்றும் 15 அடி) ஒரு வீட்டை வடிவமைத்து என் நண்பர் கட்டியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள என்னுடைய சொந்த வீட்டில் தூண்களின்றி 3.40 மீட்டர் நீள கொடுங்கையோடு வீட்டுப் பால்கனி கட்டப்பட்டிருக்கிறது, 3 ஊர்திகள் தடையின்றி நிறுத்தப்பட.
எனவே தாங்கள் குறிப்பிடுவது போல கீழே வாகனங்கள் இடைஞ்சலின்றி வந்து போக தூண்களின் இடையில்லா கேண்டிலிவர் கட்டுமானங்கள் வாய்ப்பாக அமையும் என்ற கருத்தை வழிமொழிகிறேன்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|