கதறும் கட்டுமானத்துறை கண்டுகொள்ளாத கனிமவளத்துறை..
கட்டுமானத்துறையின் மூலப்பொருட்களான சிமெண்ட், எம்.சாண்ட், கருங்கல் ஜல்லி ஆகிய பொருட்களின் விலையேற்றம் கொரானா காலகட்டத்திற்கு பிறகு அடிக்கடி உயர்ந்து தமிழக கட்டுமானத் துறையை தொடர்ந்து சோதித்து வருகிறது. எந்த கட்சி ஆட்சி ஆண்டாலும் கட்டுமானத்துறையினரை அவர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை அல்லது கட்டுமானத்துறையின் தேவையை வைத்து பெரும் வர்த்தக லாபம் செய்கிறார்கள் என்கிற தொடர் குற்றச்சாட்டு எப்போதும் இருந்து கொண்டே வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அமைந்த இந்த ஆட்சியிலும் கூட, கட்டுமானப் பொருட்களின் விலைஉயர்வு கட்டுப்படுத்த முடியாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்ற ஆண்டு இறுதியில் கருங்கல் ஜல்லி, எம்சாண்ட், குவாரி டஸ்ட் விலை 30 முதல் 40 சதவீதம் உயர்ந்து அதன் விளைவாக எரிசாம்பல் கற்கள் பேவர் பிளாக் மற்றும் பிளாக்குகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன் ச.அடிக்கான கட்டுமானச் செலவும் உயர்ந்து விட்டது.
இதனால், பெருமளவு கட்டுநர்களும் ஒப்பந்ததாரர்களும் நுகர்வோர்களும் பாதிக்கப்பட, பி ஏ ஐ, பேசியாட் போன்ற கட்டுமானத் துறை தொடர்புடைய சங்கங்கள், கட்டுமானக் கற்கள் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர். ஆனால், அரசு இன்னும் கடுமையாக விலை உயர்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே. பி. சான்ட& எம் சான்ட் ஏறத்தாழ 80 சதவீத விலை உயர்வு உயர்வை எட்டிவிட்டது.
அதாவது, மூன்று யூனிட் கொண்ட ஒரு லோடு எம். சாண்ட் 12 ரூபாய்க்கு விற்ற காலம் போய் தற்போது 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்க தொடங்கியது.
(ஏப்ரல் 27 முதல் 1 யூனிட் ஜல்லி 4,000 ரூபாய், எம்சான்ட் 5,000 ரூபாய், பி.சான்ட் 6,000 ரூபாய் என பழைய விலைக்கே விற்கத் தொடங்கி இருப்பினும் இது எத்தனை நாட்களுக்கு? என்பது நிச்சயமில்லாததாக உள்ளது.) இது குறித்து கோவை மாவட்ட கட்டிடப்பொறியாளர் சங்கத்தின் தலைவர் திரு முத்தமிழ் செல்வன் அவர்களிடம் பேசிய போது ,“எப்போதுமே விலையேற்றம் என்பது எல்லாத் துறையிலும் இருக்க வேண்டியதுதான். அதை நாம் தவறு என சொல்லவில்லை. ஆனால் அது படிப்படியாக இல்லாமல் திடீரென 50 %, 60% என உயரும் போது தன் ஒட்டுமொத்த கட்டுமானத் துறையினரும் ஸ்தம்பித்து போய் விடுகிறார்கள்.
ஏனென்றால் 2023ல், ரூ.3,200 ஆக இருந்த ஒரு யூனிட் எம். சாண்ட் 2024 மத்தியில் நான்காயிரம் ரூபாயாக உயர்ந்து, சென்ற ஆண்டு இறுதியில் 5000 ரூபாயாக மாறி ஏப்ரல் 21 லிருந்து 6 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது.
ஆற்று மணலை எடுத்து பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது தன் இந்த எம். சாண்ட். ஆனால் இதையும் ஆற்றுமணலுக்கு ஈடான விலைக்கு விற்பது என்பது மிகவும் அநீதியானது.
அது போலவே 2023 ஒரு யூனிட் 1800 ரூபாவாக இருந்த கருங்கல் ஜல்லி தற்போது 100% விலை உயர்ந்து நிற்கிறது என்றால் பொறியாளர்கள் கட்டுனர்கள் ஒப்பந்ததாரர்கள் நுகர்வோர்கள் இவர்கள் நிலையெல்லாம் இந்த அரசு யோசித்து பார்க்க வேண்டும்.
சிமெண்ட் விலை கூட இப்படித்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என விற்றது. 2023ல், சிமெண்ட் ஒரு மூட்டை சிமெண்ட் 500 ரூபாய் வரை விற்றதை நாம் நன்கு அறிவோம். அப்போது எங்களைப் போன்ற பொறியாளர் சங்கங்கள், கட்டுநர் சங்கங்கள் எல்லாம் ஒன்று கூடி குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் பல போராட்டங்கள் செய்து சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டு வந்தோம். இன்று சிமெண்டின் விலை ஒரு முட்டை ரூ.320 அளவில் வந்திருக்கிறது.
ஆர்கனைஸ்ட் செக்டரான சிமெண்ட் நிறுவனங்களின் தயாரிப்புகளையே கட்டுப் படுத்த முடிந்தது. ஆனால், குவாரி கிரஷர்களின் தன்னிச்ச்சையான விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மேலும், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழ்நாட்டிற்காகத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற நிலை வந்தால் தான் இந்த விலையற்றம் கட்டுக்குள் வரும். இங்கே இருக்கக்கூடிய கனிம வளங்களை சுரண்டி அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது என்பது தவிர்க்கப்பட கூடியதாகும்.
அரசு இது தொடர்பாக கண்காணிப்பினை ஏற்படுத்தி கிரஷர் உரிமையாளர்களை அழைத்துப் பேசி எம்.சான்ட், ஜல்லி, குவாரி டஸ்ட் ஆகியவற்றின் விலையை பாதியாக குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார் முத்தமிழ்.
ஜல்லி, எம். சாண்டுடன் மலை மாவு எனப்படுகிற குவாரி டஸ்ட் விலை உயர்ந்ததால் பிளாக், பிரிக்குகள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு எரிசாம்பல் கற்கள் மற்றும் பிளாக்குகள் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் திரு.வி.சிவகுமார். அவர்கள் கூறும் போது, “கருங்கல் ஜல்லி, எம் சான்ட், பி.சான்ட் ஆகிவற்றின் விலை உயர்வால், தமிழகம் முழுக்க ஏறத்தாழ 5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அரசு ஒப்பந்த தாரர்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் கட்டுநர்கள், பொறியாளர்கள், நுகர்வோர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக கனிம வளத்துறையினர் இந்த திடீர் விலை உயர்வை கண்டு, எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி உள்ளனர்.
ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட விலைப்புள்ளியில் பணிகளைச் செய்ய ஒப்பந்தமான ஒப்பந்ததாரர்கள், அதே விலைப்புள்ளியில் பணிகளை நிறைவு செய்ய முடியாமல், இந்த திடீர் விலையேற்றத்தினால் பெரும் அவதிக்கு உள்ளார்கள்.
குவாரி கிரஷர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள எக்கச்சக்கமான விதிமுறை கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கான உரிமத் தொகை ஏற்றம் இவற்றினால் ஒரு யூனிட்டுக்கு ஏறத்தாழ 80- 100% வரை விலையேற்றப்பட்டிருப்பதாக அறிகிறோம்.
ஒப்பந்ததாரருக்கு மட்டுமன்றி, இதனால் காண்ட்ராக்டர், பொறியாளர்களுக்கும் வீடு கட்ட நினைத்த மக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. குவாரி உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்து டிமாண்ட் ஏற்றி இருக்கிறார்கள். இதனாலும் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. எங்களைப் போன்ற கற்கள் உற்பத்தியாளர்களுக்கு எரிசாம்பல் , மற்றும் “குவாரி ட்ஸ்ட்” என்கிற மலை மாவு வெகுவாக விலை உயர்ந்து விட்டிருக்கிற சூழ்நிலையில் ஏறத்தாழ 20 சதவீத கற்கள் உற்பத்தியாளர்கள் இந்த தங்களது தொழிற்சாலைகளை மூடி இருக்கிறார்கள்.
செங்கற்களுக்கு மாற்று சிக்கன கற்களான பிளை ஆஷ் கற்கள் தயாரிக்கும் தொழிலே முடங்கும் சூழல் நிலவி வருகிறது. எரிசாம்பல் கற்களுக்கு ஆதாரம் ஃபிளை ஆஷ் மற்றும் குவாரி டஸ்ட் சிமெண்ட் ஆகியவைதான் இதுவே, பேவர் பிளாக் சாலிட் பிளாக்குகளுக்கு எம் சாண்ட், குவாரி டஸ்ட், சிமெண்ட் ஆகியன ஆதார பொருட்கள் ஆகும். திடீரென உயர்ந்து விட்ட இதன் விலையால் இனி ஃபிளை ஆஷ் பிரிக்குகள் ரூ. 10 ஐ தாண்டி விடுகிற அபாயம் ஏற்படுவதுடன் , சாலிட் பிளாக் மற்றும் எரிசாம்பல் கற்கள் சந்தையில் கிடைப்பது அரிதாகி விடும். கட்டுமானப் பொருட்களைப் பொறுத்தவரை ஒரு பொருள் விலை உயர்ந்தால் கூட, அதைச் சார்ந்த எல்லா பொருட்களும் விலை உயர்ந்து விடும். இவையெல்லாம் கட்டுமானத்துறையின் மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் ஆகும்.
இந்த மிகப்பெரிய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழக அரசு அதற்கு எத்தகு எதிர்வினையும் காட்டாமல் இருப்பது, தமிழக அரசே திட்டமிட்டு ஆற்று மணலுக்கு ஈடாக எம் சாண்டின் விலையை உயர்த்த நினைக்கிறதோ?’ என்ற எண்ணத்தை சாமானியர்களுக்கு உருவாக்கி இருக்கிறது.
ஏனெனில், அரசு திறந்து விட்டிருக்கும் மணல் குவாரிகள் அதன் விலையால் (ஏறத்தாழ ரூ.35 ஆயிரம்) பரபரப்பு விற்பனை நிலையை எட்டவில்லை என்பதால் மலிவு விலை மணலாக இருக்கக் கூடிய எம்.சான்ட் விலையை கிரஷர் குவாரிகளுடன் சேர்ந்து, ஏற்றுகிறதோ? என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் அரசும், கனிமவளத் துறையும் ஒன்றிணைந்து குவாரிகளை கண்காணித்து,
ஒருங்கிணைத்து அவற்றின் உற்பத்தியை முழுவீச்சில் அதிகரித்து, அதே பழைய விலையில் எம்.சாண்ட், கருங்கல், ஜல்லிகள், குவாரி டஸ்ட் ஆகியவற்றை சந்தையில் கிடைக்க செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்றார் சிவக்குமார்.
இதுகுறித்து விவரமறிய தமிழ்நாடு கனமவளத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் முயன்றோம். மின் அஞ்சலிலும் கேள்விகளை அனுப்பினோம். தமிழ் நாடு கனிவளத்துறைக்கு 10.4.2025 அன்று பில்டர்ஸ் லைன் அங்கீகார மின் அஞ்சலில் இருந்து, geomine@nic.in,cgmchennai32@gmail.com ஆகிய கனிமவளத்துறை மின் அஞ்சல்களுக்கு நாம் அனுப்பிய கடிதத்தின் சாரம்சம்..
‘‘அன்பிற்குரிய தமிழ்நாடு கனிம வளத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு,, சென்ற சில மாதங்களாக தமிழ்நாடு கட்டுமானத் துறையில் கருங்கல் ஜல்லி, எம் சாண்ட், குவாரி டஸ்ட் ஆகியவற்றின் விலை100% வரை உயர்ந்திருக்கிறது.
இதனால் கட்டுமானத் துறையினரும் பொது மக்களும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி கடுமையான விலையில் கனிம வள பொருட்கள் விற்பதற்கு, கனிமவளத் துறையினராகிய நீங்கள் தக்க காரணங்களை இதுவரை கூறாமலும் மேலும் அதை கட்டுப்படுத்தாமல் இருப்பதின் காரணம் அறிவது குறித்து, தமிழ்நாட்டின் முதன்மை கட்டுமானத் துறை பத்திரிகையான பில்டர்ஸ்லைன் ஆசிரியர் குழுவான நாங்கள் உங்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயன்றோம்.
ஆனால், இணைப்பு கிடைக்கவில்லை.
எனவே, தாங்கள் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பினால் அந்த பதில்களை அரசு தரப்பு விளக்கமாக எடுத்துக் கொண்டு நாங்கள் எங்கள் பத்திரிகையில் வெளியிடுவோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .’’
வழக்கம் போல இதுவரை பதில் கிடைக்க வில்லை. காத்திருப்போம். விரைவில் அரசு இந்த பிரச்சனைக்கு விசேஷ கவனம் செலுத்தி, மாநிலத்தின் மிக முக்கியமான இந்த கட்டுமானத்துறையின் கழுத்தை நெறிக்கும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முன்வரவேண்டும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2168855
|